காணிகளை வழங்கக் கோரி மக்கள் தொடர் போராட்டம்

முசலி பிரதேசச் செயலர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தம் காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை கிராமத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்கலாக வேறு இடங்களுக்குச் சென்றனர்.

இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வந்தனர்.

மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்த மக்கள் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பைக் கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு, அங்கு கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.


குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும், எதுவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சிலாவத்துறை பள்ளிவாசலுக்கு முன் ஒன்று கூடினர்.

பின்னர் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் சிலாவத்துறை கடற்படை முகாமை நோக்கிச் சென்றனர்.

இன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் ‘கடற்படையே வெளியேறு’, ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ , ‘கடற்படையே எம் நிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் குடியேற்ற வழி செய்’,’கடற்படை முகாமை மாற்ற 10 வருடங்கள் காணாதா?’, ‘கடற்படையே எமது பூர்வீக நிலத்தில் வாழும் உரிமையை தா’, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன் நின்ற மக்கள் சிலாவத்துறை கடற்படை அதிகாரிக்கு தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன் அமர்ந்து தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டத்தில் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக், சர்வமதத் தலைவர்கள், மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணியாளர்கள், குறித்த கிராமங்களைச் சேர்ந்த முஸ்ஸீம், தமிழ் மக்கள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment